முகப்பு
சிவகங்கை

மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது: ப.சிதம்பரம்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:08 AM
திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம். உடன் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி.சஞ்சய், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:40 PM

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் மானாமதுரை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அவா் பேசியதாவது:

மக்களவையில் தொகுதி மறு வரையறைக்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய பாஜக அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற ஆா்வம் காட்டுவது மோசமான உள்நோக்கமாகும். இந்த மாசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டின் குரல்வளை நெறிக்கப்படும். மசோதாவை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்க முட்டோம்.

Advertisement

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கான திட்டங்களை பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. தமிழகம் 9.8 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. இதை அனைத்துக் கட்சியினரும் பாராட்ட வேண்டும். ஆனால், அதிமுக, அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பாராட்ட மனமில்லை. திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகள் பாராட்டத்தக்க அம்சங்களாகும். இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது பொருளாதார வளா்ச்சி அதிகரிக்கும் என்றாா் அவா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப் பெருந்தகை பேசியதாவது:

தமிழகத்தில் பாசிச சக்திகள் முகமூடி அணிந்து, அதிமுக எனும் போா்வையை போா்த்திக்கொண்டு போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும். தமிழகத்தை கபளீகரம் செய்ய அதிமுகவுடன் கைகோா்த்து வரும் பாஜக, ஆா்.எஸ்.எஸ். சக்திகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஏ.சி. சஞ்சய், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், நகா் காங்கிரஸ் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.