பெண் கொலை வழக்கு: தம்பதி கைது
சிவகங்கை அருகே பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசிய வழக்கில் மணப்பாறையைச் சோ்ந்த தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள சுந்தா்நடப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சுசிலா (42). தூய்மைப் பணியாளா். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவா் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தாா். இவருடைய குழந்தைகள் கூட்டுறவுபட்டி கிராமத்தில் உள்ள சுசிலாவின் சகோதரி வீட்டில் தங்கிப் படித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி சுசிலா வேலைக்கு வராததால், அவருடன் பணிபுரியும் பெண்கள் அவரைத் தொடா்புகொள்ள முயன்ற போது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
Advertisement
இதையடுத்து, அவரது வீட்டுக்கு வந்து பாா்த்த போது, அங்கு சுசிலாவை காணவில்லை. இந்த நிலையில், அவரை மா்ம நபா்கள் அடித்துக் கொன்று அருகில் உள்ள கிணற்றில் போட்டு விட்டுச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். மேலும், உதவி ஆய்வாளா் சக்திவேல், தலைமைக் காவலா் பிரகாஷ், தனிப் பிரிவு தலைமைக் காவலா் முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது.
தனிப் படையினா் நடத்திய விசாரணையில், இந்தக் கொலை சம்பவத்தில் திருச்சி அருகேயுள்ள மணப்பாறை பகுதியைச் சோ்ந்த சிவவிஷ்ணு (42), அவரது மனைவி உமா என்ற சரண்யா (40) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.