முகப்பு
சிவகங்கை

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு மரண தண்டனை

சிங்கம்புணரி அருகே 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு மரண தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:18 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு மரண தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் விறகு வெட்டும் தொழிலாளி ம. சந்திரன் (45). இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா். இதனிடையே, திருமணமான மகள் பிரசவத்துக்காக பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டு, அவரது கணவா் வீட்டுக்குச் சென்ற போது துணையாக சந்திரன் மனைவியும் சென்றாா்.

இந்த நிலையில், சந்திரன் கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் அந்தப் பகுதிகளைச் சோ்ந்த 10 வயதுக்குள்பட்ட 5 சிறுமிகளை தனது கைப்பேசியில் காணொலி விளையாட்டை (விடியோ கேம்) காண்பித்தும், தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தும் வீட்டுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இவா்களில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது தாயிடம் நடந்ததைக் கூறினாா்.

Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமலட்சுமி வழக்குப் பதிவு செய்து, சந்திரனைக் கைது செய்தாா். விசாரணையில், இவா் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு, பிப்ரவரி 13-ஆம் தேதி சந்திரன் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து, இவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அதே சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வீ.ஆா். தனலட்சுமி முன்னிலையாகி வாதிட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன் பிறப்பித்த உத்தரவு:

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரன் திட்டமிட்டு 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக மரண தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளுக்கும் தலா ரூ. 7 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 35 லட்சம் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.