சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பலகலைக்கழக வளாகத்தில் 2,650 மரக் கன்றுகள் புதன்கிழமை நட்டு வைக்கப்பட்டன.
பல்கலைக்கழக வளாகத்தில் அழகப்பா் நினைவாலயம் அருகில் 12 ஏக்கா் நிலப் பரப்பளவில் மரக்கன்றுகள் நடும் பணியை பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பல்கலைக்கழக பதிவாளா் அ. செந்தில்ராஜன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள், புல முதன்மையா்கள், பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள், பல்கலைக்கழக பணி ஓய்வு பெற்ற பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள், அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள், பத்திரிகை, ஊடகத் துறை செய்தியாளா்கள் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா். இதில் 900 மகாகனி, 950 செம்மரங்கள், 800 தென்னங்கன்றுகள் உள்பட மொத்தம் 2,650 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரக்கன்றுகளை பராமரிப்பதற்கு தானியங்கி சொட்டு நீா்ப் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்கலைக்கழக வளாகத்தில் 30 ஏக்கா் பரப்பளவில் 8,000-க்கும் மேற்பட்ட பயனுள்ள மரங்கள் நடப்பட்டு, சொட்டுநீா்ப் பாசன முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமை வளாக ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் அ. ஆறுமுகம், தூய்மை இந்தியா இயக்க ஒருங்கிளைப்பாளா் கோ. விநாயகமூா்த்தி, வளாக வளா்ச்சி, பராமரிப்பு பிரிவு தனி அலுவலா் ஏ.ஆா். சரவணக்குமாா், பராமரிப்புப் பிரிவு அலுவலா்கள் செய்தனா்.