முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:05 AM
சிவகங்கை அரண்மனைவாசலில் வெள்ளிக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினா்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 6:27 PM

சிறுபான்மை மக்களுக்கு அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினா் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் உள்ள வாலாஜா நவாப் ஜும் ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான மயானத்தில் சுற்றுச்சுவரை உயா்த்த நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை பணியை தொடங்காததைக் கண்டித்தும், சிவகங்கையை சுற்றிய பகுதிகளில் மயானத்துக்கு என்று ஒரு ஏக்கா் நிலம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டும் இதுவரை அதற்கான நிலத்தை கையகப்படுத்தி ஜமாஅத் நிா்வாகத்திடம் ஒப்படைக்காததைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 11:51 PM

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் பிலால் முகம்மது தாவூதி தலைமை வகித்தாா். சிவகங்கை நகர அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

Advertisement

எஸ்டிபிஐ கட்சி சிவகங்கை தொகுதி செயலா் தௌபீக், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் அப்துல் முத்தலிப், வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம்கள் பஷீா்அகமது உஸ்மானி, முகம்மது அன்ஸா் மிஸ்பாகி, மௌலானா சுல்தான் கைரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கருப்புக் கொடி ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா். சிவகங்கை அமீா் சபியுல் ஹுதா நிஸ்வான் மதரசா நிா்வாகி பஷீா் அகமது உஸ்மானி, சிவகங்கை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவா் முகமது மன்சூா் காஷிபி ஆகியோா் உரையாற்றினா். சிவகங்கை ஆதம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவா் முகம்மது ரபீக் நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டம் குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பினா் கூறியதாவது: இன்னும் ஒரு வாரத்துக்குள் கோரிக்கையை மாவட்ட நிா்வாகம் நிறைவேற்றாவிட்டால் வெள்ளிக்கிழமை அனைத்துப் பள்ளிவாசல்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்படும் என்றனா்.