சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள அம்மன்பட்டியில் செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கையொட்டி, மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அம்மன்பட்டி செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கையொட்டி, பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 37 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
பெரிய மாடு பிரிவில் 20 ஜோடி மாடுகளும், 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவில் 17 மாட்டு வண்டிகளும், 5 கி.மீ. தொலைவு எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன.
அம்மன்பட்டியிலிருந்து ஒக்கூா் வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், இதன் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியை மதகுபட்டி, வீளநேரி, நகரம்பட்டி, ஒக்கூா், காளையாா்மங்கலம், மேலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று கண்டுகளித்தனா்.