சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நிலவும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளது. மானாமதுரை,திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக வயதானவா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
சில நாள்களில் மாலைப் பொழுதிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பனிப் பொழிவு நீண்ட நேரம் நீடிப்பதால் பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் செல்கின்றன. வீதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுகிறது.