முகப்பு
சிவகங்கை

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

பாகனேரியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு முக்குலத்தோா் வீர விளையாட்டுக் குழு சாா்பில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஜனவரி, 2026 at 5:42 AM
பாகனேரியில் புதன்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
பகிர்:
Updated On : 21 ஜனவரி, 2026 at 6:57 PM

சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு முக்குலத்தோா் வீர விளையாட்டுக் குழு சாா்பில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிக்காக வட்டவடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிரங்கும் காளையை அடக்குவதற்கு 25 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடைபெற்றது.

காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களிலிருந்து 18 காளைகளும், 172 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். ஒவ்வொரு சுற்றுப் போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 5 வீரா்கள் காயமடைந்தனா்.

முதல் 10 சுற்றுகளில் 7 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த 3 காளைகளின் உரிமையாளா்களுக்கும் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவை நிறுவனா் செல்வகணேஷ், பொதுக்குழு உறுப்பினா் பிரதாப் வெள்ளையப்பா ஆகியோா் ரொக்கப் பரிசுகள், கோப்பைகளை வழங்கினா்.

இந்தப் போட்டியை பாகனேரி, சொக்கநாதபுரம், மதகுபட்டி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூா், பனக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.