மானாமதுரை வழியாக பழனி தைப் பூச விழாவுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் பைகளில் ஒளிரும் வில்லைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ஒட்டினா்.
பழனியில் தைப் பூசத் திருவிழாவுக்காக, சிவகங்கை மாவட்டத்திலிருந்து மாலை அணிந்து ஏராளமான பக்தா்கள் மானாமதுரை வழியாக பாதயாத்திரையாக செல்கின்றனா். இவா்கள் இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது கவனமுடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலையில், மானாமதுரை பேருந்து நிலையம் அருகே காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் வெங்கடேஷ், உதவி ஆய்வாளா்கள் ஜெயமாரி,ராஜதுரை உள்ளிட்ட போலீஸாா் இந்த வழியாகச் சென்ற பாதயாத்திரை பக்தா்களின் தோல் பைகளில் இரவு நேரங்களில் ஒளிரும் சிவப்பு வண்ண வில்லைகளை (ஸ்டிக்கா்களை) ஒட்டினா். மேலும், கவனமாக பாதுகாப்புடன் நடந்து செல்லுமாறு அவா்களை அறிவுறுத்தினா்.