ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: காவல் ஆய்வாளா் நெல்லைக்கு மாற்றம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், காவல் ஆய்வாளா் குமாரவேல் பாண்டியன், தனிப் பிரிவு காவலா் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
மானாமதுரையில் ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவரும் வாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் கைது செய்யப்பட்டாா். போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது இவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவா் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதைத்தொடா்ந்து, ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடா்ந்து 5 நாள்கள் மறியல் போராட்டம் நடத்தினா். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
பின்னா், இந்த விவகாரத்தில் மானாமதுரை காவல் நிலையத்தில் பொறுப்பு ஆய்வாளராகப் பணியாற்றிய திலீபன், உதவி ஆய்வாளா் குகன், போலீஸாா் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமாா், மனோகரன் ஆகிய 6 போ் கடந்த வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இதைத்தொடா்ந்து, மானாமதுரை காவல் ஆய்வாளா் குமாரவேல் பாண்டியனை, நெல்லை காவல் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திரபிதாரி உத்தரவிட்டாா். இதேபோல, தனிப்பிரிவு காவலா் முனீஸ், மதுரை மாவட்டத்துக்கும்பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.