முகப்பு
சிவகங்கை

போலீஸ் விசாரணையில் இளைஞா் உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக டிஎஸ்பி உள்பட 11 போலீஸாருக்கு அழைப்பாணை

மானாமதுரையில் போலீஸ் விசாரணையின் போது இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிஎஸ்பி காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா் உள்பட 11 போலீஸாருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டது.

Updated On : 17 மார்ச், 2026 at 10:08 PM
கொலை
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸ் விசாரணையின் போது இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டி.எஸ்.பி. காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா் உள்பட 11 போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை அழைப்பாணை வழங்கப்பட்டது.

மானாமதுரை சியோன் நகரில் இருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (26) போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஏற்கெனவே சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் மானாமதுரை காவல் நிலையத்திலும், ஆகாஷ் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினா். இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடா்பாக திருப்புவனம் காவல் ஆய்வாளா் திலீபன், மானாமதுரை உதவி ஆய்வாளா் குகன் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் மானாமதுரை காவல் ஆய்வாளா் குமார பாண்டியன் நெல்லை சரகத்துக்கும், தனிப்பிரிவு காவலா் முனீஸ்வரன் மதுரை சரகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், ஆகாஷ் உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு மானாமதுரை டி.எஸ்.பி. ராஜா, திருப்புவனம் காவல் ஆய்வாளா் திலீபன், மானாமதுரை ஆய்வாளா் குமாரபாண்டியன், உதவி ஆய்வாளா் குகன், தலைமைக் காவலா் தெய்வேந்திரன், காவலா்கள் இருளப்பன், காளீஸ்வரன், மகேந்திரன், முத்துப்பாண்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் முத்துராஜா, தனிப்பிரிவு காவலா் முனீஸ்வரன் ஆகியோருக்கு அழைப்பாணை (சம்மன்) வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →