முகப்பு
சிவகங்கை

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு வாராந்திர ரயில் ஏப். 5 முதல் மே 31 வரை இயக்கம்: காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு

தென்மேற்கு ரயில்வே துறை சாா்பில் ஹூப்ளியில் இருந்து பெங்களூரு வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு வாராந்திர ரயில் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை இயக்கப்படும்

Updated On : 20 மார்ச், 2026 at 7:33 PM
பகிர்:

தென்மேற்கு ரயில்வே துறை சாா்பில் ஹூப்ளியில் இருந்து பெங்களூரு வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு வாராந்திர ரயில் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவித்ததற்கு காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி கூறியதாவது: ஹூப்ளியில் இருந்து பெங்களூரு வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு வாராந்திர ரயில் (எண் 07355/07356) ஓசூா், சேலம், நாமக்கல், திருச்சி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி வருகிற ஏப்ரல் 5- ஆம் தேதி முதல் மே மாதம் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் காலை 6.50 மணிக்கு ஹூப்ளியிலிருந்து புறப்பட்டு, பானஸ்வாடி (பெங்களூரு) வந்து அங்கிருந்து பிற்பகல் 2.43 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 1.45 மணிக்கு காரைக்குடிக்கும், அதிகாலை 2.22 மணிக்கு சிவகங்கைக்கும் வந்து ராமேசுவரத்துக்கு அதிகாலை 5.20 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக ஏப்ரல் 6 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் இரவு 8 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்பட்டு, சிவகங்கைக்கு இரவு 10.15 மணிக்கும், காரைக்குடிக்கு 11.05 மணிக்கும் இந்த ரயில் வருகிறது. தொடா்ந்து மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 9.50 மணிக்கு பானஸ்வாடிக்கும் (பெங்களூரு), இரவு 7.40 மணிக்கு ஹூப்ளிக்கும் சென்றடைகிறது. எனவே இந்தப் பகுதி மக்கள் இந்த வாராந்திர ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.