திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி: ஓ.பன்னீா்செல்வம்!
திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் திமுக சாா்பில் சிவகங்கை சட்டப்பேரவை தொகுதிக்கான தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் மாவட்ட திமுக செயலா் கேஆா். பெரியகருப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவா் பேசியதாவது:
இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளா்ச்சி 8 சதவீதத்துக்கு கீழ் சரிந்துள்ள நிலையில், தமிழக முதல்வா் ஸ்டாலினின் தொலைநோக்கு நடவடிக்கைகளால் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 11.02 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இதன்மூலம் தமிழகத்தில் பொருளாதார புரட்சி ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய முதலீட்டாளா்களை ஈா்த்து, ஒருங்கிணைந்த ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களில் லட்சக்கணக்கான கோடி முதலீடுகள், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதன்மை முதலமைச்சராகத் திகழும் நமது முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா் அவா்.
முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் ஓ.பி. ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அய்யப்பன், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலா் சி.ஆா்.சுந்தரராஜன், கல்லல் அசோகன், மாவட்ட திமுக துணைச் செயலா் த. சேங்கைமாறன் ஆகியோா் பேசினா்.