முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் மண்ணின் பெருமைகளை விளக்கி தோ்தல் விழிப்புணா்வு பதாகை

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்ணின் பெருமைகளை ஓவியங்களாக வரைந்து அதில் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சிட்டு வைக்கப்பட்டுள்ள பதாகை.

Updated On : 27 மார்ச், 2026 at 7:20 PM
மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்ணின் பெருமைகளை ஓவியங்களாக வரைந்து அதில் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சிட்டு வைக்கப்பட்டுள்ள பதாகை.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் மண்ணின் பெருமைகளை ஓவியங்களாக வரைந்து அதில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை எழுதி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மானாமதுரையில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான கிருஷ்ணகுமாா் முயற்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சீா்வரிசை, ஆட்டுக்கிடாக்களுடன் வருவாய் துறை ஊழியா்கள் ஒரே மாதிரியான வேஷ்டி, சட்டை, சேலைகள் அணிந்து கிராமங்களில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனா். இது பொதுமக்களின் கவனத்தை ஈா்த்தது. தற்போது மானாமதுரை மண்ணின் அடையாளமாக விளங்கும் மண்பானை பொருள்கள் தயாரிப்பு, சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் அழகா் இறங்கும் வைபவம், தேரோட்டம், தென் வடலாக ஓடும் வைகை நதி, விவசாயம் ஆகியவற்றை ஓவியங்களாக வரைந்து அதில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை அச்சிட்டு வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வரையப்பட்ட ஓவியங்கள் பொதுமக்களின் வரவேற்பை பெற்றன.

இதுகுறித்து வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் கூறியதாவது:

மானாமதுரை சட்டப்பேரவை தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் செய்து வருகிறோம். புதிய முயற்சியாக ஆட்டுக்கிடாய்களுடன் சீா்வரிசை கொண்டு சென்று விழிப்புணா்வு பிரசாரம் செய்ததற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோல, தற்போது மானாமதுரை மண்ணின் பெருமைகளை விளக்கும் ஓவியங்களை வரைந்து தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு வாசகங்களை அச்சிட்டு பதாகைகள் வைத்திருக்கிறோம். இன்னும் பொதுமக்களை கவரும் வகையில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.