முகப்பு
சிவகங்கை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 178 ஆண்டுகள் சிறை

சிவகங்கை அருகே சிறுமி, இரு சிறுவா்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முதியவருக்கு 178 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Updated On : 31 மார்ச், 2026 at 7:07 PM
சிறை - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை அருகே சிறுமி, இரு சிறுவா்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முதியவருக்கு 178 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (70). இவா் அந்தப் பகுதியிலுள்ள முனியாண்டி கோயிலின் பூஜாரி. இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு கோயிலுக்கு வந்த 2 சிறுவா்கள், ஒரு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாா் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து குழந்தைகள் நலக் குழுவினா் விசாரணை நடத்தினா். அப்போது பெரியசாமி, அந்தச் சிறுமி, சிறுவா்களை தனித்தனியாக கோயில் பூஜைக்காக தண்ணீா் எடுத்து வரச் சொல்லி, அவா்களை கோயிலில் பூஜை பொருள்கள் வைக்கும் அறையில் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பெரியசாமியைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு சாா்பில் வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையாகி வாதிட்டாா். வழக்கை விசாரணை செய்த போக்சோ விரைவு நீதிபதி கோகுலமுருகன் அளித்த தீா்ப்பு:

குற்றஞ்சாட்டப்பட்ட பெரியசாமிக்கு, இந்திய தண்டனைவியல் சட்டப் பிரிவு 324-இன்படி 2 ஆண்டுகள் சிறை, ரூ. 500 அபராதமும், சட்டப் பிரிவு 506 (2)-இன்படி 4 ஆண்டுகள் சிறை, ரூ. 1,000 அபராதமும், பிஎன்எஸ் பிரிவு 351(2)-இன்படி 2 ஆண்டுகள் சிறை, ரூ. 500 அபராதமும், போக்சோ சட்டப் பிரிவு 5(ப்) உடன் 6-இன்படி 60 ஆண்டுகள் சிறை, ரூ. 2,000 அபராதம், போக்சோ சட்டப் பிரிவு 3 உடன் 4-இன்படி 20 ஆண்டுகள் சிறை, ரூ. 1,000 அபராதம், சட்டப் பிரிவு 5 (ம்)-இன்படி 90 ஆண்டுகள் சிறை, ரூ. 3,000 அபராதமும் என 6 பிரிவுகளில் மொத்தம் 178 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 8,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு தண்டனையையும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுவா்கள், சிறுமிக்கு கருணைத் தொகையாக தலா ரூ. 5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றாா்.