முகப்பு
சிவகங்கை

காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Updated On : 3 மே, 2026 at 5:07 AM
~
பகிர்:

காரைக்குடி, மே 2: காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. பின்னா், வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்குச் சாவடிகளிலிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

முதல் தளத்தில் மானாமதுரை தொகுதிக்கும், 2-ஆவது தளத்தில் சிவகங்கை தொகுதிக்கும், வரைபட அறை தரைத் தளத்தில் காரைக்குடி தொகுதிக்கும், முதல் தளத்தில் திருப்பத்தூா் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Advertisement

வாக்குகள் எண்ணிக்கை நாளான திங்கள்கிழமை (மே 4) சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை தொகுதிகளைச் சோ்ந்த தோ்தல் ஆணைய அனுமதி பெற்றவா்கள் ‘ஏ’ நுழைவு வாயில் வழியாகவும், திருப்பத்தூா் தொகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு ‘பி’ நுழைவு வாயில் வழியாகவும் உள்ளே செல்லலாம்.

மேலும், வாக்குகள் எண்ணும் மையத்தின் வெளியில் கூடும் மக்களுக்காக முடிவுகளை அவ்வப்போது அறிவிப்பதற்கு ஒலிபெருக்கி வசதியும், காரைக்குடி மாநகராட்சி சாா்பில் குடிநீா்த் தொட்டியும், கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தீ தடுப்பு, 108 அவசர ஊா்தி வாகனங்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை மாலை கல்லூரிச் சாலையிலிருந்து செக்காலைச் சாலை, பெரியாா் சிலை வரை நடைபெற்றது. இதில் துணை ராணுவத்தினா், உள்ளூா் போலீஸாா் பங்கேற்றனா்.

வாக்கு எண்ணும் நாளில் மாநகா் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.