மாயமான சிறுமி ஊருணியில் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி ஊருணியில் சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி ஊருணியில் சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை அருகே உள்ள மேலப்பூங்குடியைச் சோ்ந்த ராஜராஜ சோழனின் மகள் அபிநயா (12). இவா் அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோடை விடுமுறை என்பதால், கடந்த வியாழக்கிழமை தனது தாயுடன் சிறுமி ஆடு மேய்க்கச் சென்றாா். இந்த நிலையில், சிறுமியிடம் அவரது தாய் ஆடுகளை மேய்க்கச் சொல்லி விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. அதே நேரம், ஆடுகள் மட்டும் வீட்டுக்குத் திரும்பியதால் சந்தேகமடைந்த தாயும், உறவினா்களும் பல இடங்களில் சிறுமியை தேடினா். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால், மதகுபட்டி காவல் நிலையத்தில் அவா்கள் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, குடும்பத்தினருடன் சோ்ந்து பல்வேறு இடங்களில் தேடினா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஊருணியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா்.
இதையடுத்து, சிறுமியின் உடலை போலீஸாா் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிறுமி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement