தேனி, அன்னஞ்சி விலக்கு அருகே வியாழக்கிழமை கட்டடத்தில் மின்சாதனம் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தேனி அல்லிநகரம், காந்திநகரைச் சேர்ந்தவர் அய்யப்பன் மகன் ராஜீவ் (23). இவர், அன்னஞ்சி விலக்கு அருகே உள்ள தனியார் தொழில் கூட வளாக கட்டடத்தில், இரும்பு ஏணி மீது ஏறி நின்று மின்சாதனங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் மின்சாரம் பாய்ந்து ஏணியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில், காயமடைந்து கீழே விழுந்த ராஜீவ், தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராஜீவின் தந்தை அய்யப்பன் அளித்த புகாரின் பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.