தேனி துப்புரவு பணியாளர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு: ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
தேனி அல்லிநகரம் நகராட்சி துப்புரவு பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில்
தேனி அல்லிநகரம் நகராட்சி துப்புரவு பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக புகார் தெரிவித்து சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 3 தரப்பைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இச்சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தேனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், குறிப்பிட்ட ஒரு தரப்பைச் சேர்ந்த 5 நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் மட்டும் வேட்பு மனுக்களை பெற்று, வீருபொம்முராஜ் என்பவரை தலைவராகவும், முருகேசன் என்பவரை துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்வதாக தேர்தல் அலுவலர் முருகேசன் வெள்ளைச்சாமி அறிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் முறைகேடாக நடைபெற்றதாகவும், தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்தல் அலுவலர் தன்னிச்சையாக அறிவித்துள்ளதாகவும் புகார் தெரிவித்து, சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பாண்டி, வெங்கடேசன், சந்திரசேகரன், சின்னக்காளை, சண்முகவேல், பாக்கியம் ஆகிய 6 பேரும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமியிடம் மனு அளித்தனர்.