வைகை அணையில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேங்கியதால் ஞாயிற்றுக்கிழமை, நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
வைகை அணை அருகே அரப்படித்தேவன்பட்டி, சக்கரைப்பட்டி, கரட்டுப்பட்டி, வைகைபுதூர் ஆகிய இடங்களில் அணை நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்டுள்ள தண்ணீர், மூல வைகை மற்றும் கொட்டகுடி ஆறுகளில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வரத்து ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியது.
அணையில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், நீர்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து கடல் போல் காணப்படுகிறது. அணைக்கு தொடர்ந்து விநாடிக்கு 3,336 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது, உபரி நீர், அணையின் 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீர் இருப்பு 600 மில்லியன் கன அடிக்கும் மேல் உள்ளது.
இந்நிலையில், அணை நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மிளகாய், வாழை, தக்காளி, முட்டைக்கோசு உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.