மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளதை அடுத்து, அக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கர்நாடக மாநிலம், ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகாசமஸ்தான மடம் சார்பில், ஸ்ரீநிர்மலாநந்தா சுவாமிஜியின் 5 ஆம் ஆண்டு முடிசூட்டு விழாவை முன்னிட்டு, ஞான விஞ்ஞான தந்த்ர மேளா-2018 என்ற தலைப்பில், மாண்டியாவில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டிகள் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
இப் போட்டியில், மருத்துவம், பொறியியல், நர்சிங், கல்வியியல், ஆசிரியர் பயிற்சி, கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் என மொத்தம் 200 கல்லூரிகள் பங்கேற்றன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில், தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரி மாணவிகள், தார்மீக மற்றும் நெறிமுறை மதிப்புகள் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற கண்காட்சியில் ஒட்டுமொத்த முதல் பரிசினை வென்றனர்.
நடனப் போட்டியில் முதலிடமும், விநாடி-வினா போட்டியில் அரை இறுதி வரை முன்னேறினர்.
முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள், அவற்றுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை மகாசமஸ்தான மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீநிர்மலாநந்தா சுவாமிகளிடம், கல்லூரிச் செயலரும், கம்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என். ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
இதற்கான பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை, கல்லூரிச் செயலர் என். ராமகிருஷ்ணன், இணைச் செயலர் ஆர். வசந்தன், முதல்வர் ரேணுகா, ஆலோசனைக் குழு உறுப்பினர் எம். கோபாலகிருஷ்ணன், வணிகவியல் துறைப் பேராசிரியை வி. வாணி, மேலாளர் ஆர். நந்தபாலன் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.