தேனி மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் உத்தமபாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் லோயர் கேம்ப் முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் முதல் போக நெற்பயிர் விவசாயம் 14,707 ஏக்கரில் நடைபெற்றது. ஜூலை மாதத்தில் தொடங்கிய முதல் போக நெல் விவசாயத்தில் தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கம்பம், கூடலூர் பகுதிகளில் அறுவடை நிறைவுற்ற நிலையில் 4 ஆயிரம் ஏக்கரில் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் நெற்பயிர் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தற்போது இப்பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக தீவிரமாக அறுவடை நடைபெற்று வருகிறது. இதில் 50 சதவீத அறுவடை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கஜா புயல் காரணமாக வியாழக்கிழமை இரவு முதல் பெய்த பலத்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. எனவே இவற்றை அறுவடை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.