தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையும் இணைந்து ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் சுருளி சாரல் விழாவை நடத்துகின்றனர். இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொள்கின்றனர்.
முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். சுற்றுலா பண்பாடு, அற நிலையங்கள் துறை கூடுதல் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வெ.பழனிக்குமார் ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றுகின்றனர். சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை வகித்து பேசுகிறார். சாரல் விழாவை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி பேசுகிறார்.
பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து வைத்து பேசுகிறார். விழாவிற்கு தேனி மக்களவை உறுப்பினர் ரா.பார்த்திபன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் மற்றும் மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
விழாவின் இரண்டாம் நாள் திங்கள் கிழமை மாலை 3 மணிக்கு சுற்றுலா அலுவலர் தி.உமாதேவி அனைவரையும் வரவேற்று பேசுகிறார். தேனி மக்களவை உறுப்பினர் ரா.பார்த்திபன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர். சிறந்த அரங்குகளுக்கு கேடயம் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பேசுகிறார். மாவட்ட வன அலுவலர் எஸ்.கௌதம், மேகமலை வன உயிரினக் காப்பாளர் சி.கலாநிதி, காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் பா.திலகவதி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். இரண்டு நாள் விழாவிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.