உத்தமபாளையம் அருகே சொத்துப் பிரச்னையில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த உறவினரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மனைவி லட்சுமி(50).
இவரது சகோதரி இருளாயி, சகோதரன் நாகராஜ் ஆகியோருக்குச் சொந்தமாக அனுமந்தன்பட்டியில் 1.20 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பான பிரச்னையில், தனது வீட்டருகே நின்றிருந்த லட்சுமியை, அவரது சகோதரர் நாகராஜின் மருமகன் வடிவேல்(27) என்பவர் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த உத்தமபாளையம் போலீஸார் லட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் வடிவேலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.