போடியில் பணம் விநியோகம் செய்ததாகக் கூறி அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெண் பிரமுகர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது சில பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சவீதா என்பவர் பணம் விநியோகம் செய்ததாகக் கூறி ஒரு விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அதுகுறித்து காவல்துறைக்கும் புகார் செய்யப்பட்டது. இதனிடையே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய தேனி மாவட்ட ஆட்சியரும், தேனி மக்களவை தொகுதி தேர்தல் அலுவலருமான ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். அதன் பேரில் போடி மேலச்சொக்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீஸார் சவீதா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.