தேனியில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
தேனி பழைய அரசு மருத்துவமனை சாலை, 2-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (61). இவர், தனது மனைவி வேல்மணியுடன் (55), இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள நல்லமுடிபட்டிக்குச் சென்று விட்டு தேனிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, தேனி பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ள வேகத் தடை மீது இருசக்கர வாகனம் ஏறி இறங்கிய போது, வேல்மணி
நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்மணி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேல்மணியின் சகோதரர் கதிர்வேல் அளித்த புகாரின்பேரில், தேனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.