தேனி மாவட்டம் ஏவிசி மேகமலை கிராமங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் நான்கு நாட்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருவதாக தேயிலை தோட்டத் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஹைவேவிஸ் பேரூராட்சியில், மணலார், மேல் மணலார், வெண்ணியார், இரவங்கலார் மகாராஜா மெட்டு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் அங்குள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு நேரங்களில் பொதுமக்கள் இருளில் மூழ்கி அவதி அடைவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், தேயிலை தொழிற்சாலை உட்பட வீடுகள், அரசு அலுவலகங்கள், தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்தும் மின்சாரம் இன்றி எவ்வித பணிகள் நடக்க முடியாமல் முடங்கிக் கிடக்கிறது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மலை கிராமத்திற்கு தடைபட்டு உள்ள மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.