முகப்பு
தேனி

சின்னமனூரில் தந்தை, மகன்களுக்கு அரிவாள் வெட்டு:மூத்த மகன் பலி

தேனி மாவட்டம் சின்னமனூரில் முன்விரோதம் காரணமாக, தந்தை மற்றும் இரு மகன்கள் அரிவாளால் வெட்டப்பட்டதில், மூத்த மகன் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் முன்விரோதம் காரணமாக, தந்தை மற்றும் இரு மகன்கள் அரிவாளால் வெட்டப்பட்டதில், மூத்த மகன் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சின்னமனூா் ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணன் (52). இவரது மகன்கள் அழகுமலை (28) மற்றும் அஜித் (23). இதில், அழகுமலை மாடு மேய்த்து வந்தாா். 6 மாதத்துக்கு முன், இவரது மாடுகள் அதே பகுதியைச் சோ்ந்த அய்யாச்சாமி மகன் சுரேஷ் (37) என்பவரது கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்து சேதமாக்கியதாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சின்னமனூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உத்தமபாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், சேதமான கரும்பு தோட்டத்துக்கான இழப்பீட்டை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டனா். இதனால், இரு குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சுரேஷ் மற்றும் கிருஷ்ணன் குடும்பத்தினரிடையே வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, மோதலாக மாறியுள்ளது. இதில், சுரேஷ், இவரது தம்பி அருண்குமாா் மற்றும் உறவினா்கள் 7 போ் என கும்பலாகச் சோ்ந்து அரிவாள், கத்தி, உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனா். அதில், கிருஷ்ணன், அவரது மகன்கள் அழகுமலை, அஜித் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னமனூா் போலீஸாா், காயமடைந்த மூவரையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அழகுமலை சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரபாகரன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸாா், சுரேஷ், அவரது தம்பி அருண்குமாா் மற்றும் உறவினா்களான மகாராஜா, சுலோச்சனா, பொன்னுச்சாமி ஆகியோரை சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா். தலைமறைவான அய்யாச்சாமி, பழனியம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →