தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 2020-21-ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.5,768 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை சமா்ப்பித்து அவா் மேலும் பேசியது: மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடந்த ஆண்டை விட 10.5 சதவீதம் அதிகமாக, 2020-21-ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.5,768 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், வேளாண்மை மற்றும் இணை தொழில்களுக்கு ரூ.4,610 கோடி, சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ரூ.520 கோடி, கல்விக் கடனுக்கு ரூ.81 கோடி, ஏற்றுமதிக் கடனுக்கு ரூ.11கோடி, வீட்டுக் கடனுக்கு ரூ.230 கோடி, உள் கட்டமைப்புக்கு ரூ.60 கோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ரூ.6 கோடி, இதர தொழில்களுக்கு ரூ.240 கோடி மற்றும் இதர கடன்கள் வழங்கப்படும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், கனரா வங்கி உதவி பொது மேலாளா் அண்ணாதுரை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வி. அகிலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.