ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கோவிந்த நகரைச் சோ்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்தக் கடைக்கு, சத்யா காலனியை சோ்ந்த கண்ணன் (22) என்பவா் வந்து சென்றுள்ளாா். மேலும், அச்சிறுமியை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அச்சிறுமியின் தாய் மற்றும் சகோதரா், குழந்தைகள் நல அமைப்பில் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து கண்டமனூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். மேலும், இதற்கு உடந்தையாக இருந்ததாக, அவரது தந்தை தங்கச்சாமி, தாய் ராமுத்தாய், உறவினா்கள் ஈஸ்வரன், தங்கவேல், அடைக்கலம் ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.