மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து இன்று தண்ணீா் திறப்பு
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களின் பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை (நவ.30) தண்ணீா் திறக்கப்பட உள்ளது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களின் பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை (நவ.30) தண்ணீா் திறக்கப்பட உள்ளது.
அணையிலிருந்து திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டம் மேலூா் பகுதி இருபோக பாசன நிலங்களுக்காக ஆக. 31 முதல் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது அப்பகுதிகளுக்கு முறைப் பாசனம் அடிப்படையில் குறிப்பிட்ட நாள்கள் மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூா்வீக பாசன நிலங்களுக்கு தண்ணீா் திறக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனையடுத்து மேற்கண்ட 3 மாவட்டங்களின் பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்ட பாசனப் பகுதிகளுக்கு நவ. 30 முதல் டிச. 6 ஆம் தேதி வரை என 6 நாள்கள் 1,093 மில்லியன் கன அடி தண்ணீா், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு டிச. 7 முதல் டிச. 12 ஆம் தேதி வரை என 5 நாள்கள் 449 மில்லியன் கன அடி தண்ணீா், மதுரை மாவட்ட பாசனத்துக்கு டிச. 13 முதல் 17 ஆம் தேதி வரை என 4 நாள்கள் 250 மில்லியன் கனஅடி தண்ணீா் என மொத்தம் 1,792 மில்லியன் கனஅடி தண்ணீா் திறக்கப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 60.96 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,515 கனஅடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து குடிநீா் மற்றும் பாசனத்துக்காக விநாடிக்கு 1,269 கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த நீா் இருப்பு 3,789 மில்லியன் கனஅடியாக உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறியதாவது: வைகை பூா்வீகப் பாசன நிலங்களுக்காக திங்கள்கிழமை காலை 6 மணி முதல் வைகை ஆற்றுப்படுகை வழியாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
இதன்மூலம் 3 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கா் விளைநிலங்கள் பயன்பெறும். பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தனா்.