இளம் பெண் சாவில் சந்தேகம்: காவல்நிலையத்தில் சகோதரர் புகார்
காமயகவுண்டன்பட்டியில் இரண்டு குழந்தைகளின் தாய் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி ராயப்பன்பட்டி காவல்நிலையத்தில் திங்கள் கிழமை புகார் செய்தார்.
தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில் இரண்டு குழந்தைகளின் தாய் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி ராயப்பன்பட்டி காவல்நிலையத்தில் திங்கள் கிழமை புகார் செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், சூரியவிலார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் கவிதா (27). தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன்(30 ). இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
தற்போது கேப்டன் பிரபாகரன் அவரது மனைவி கவிதா ஆகியோர் காமயகவுண்டன்பட்டியில் வசித்து வருகின்றனர். இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கவிதா வீட்டினுள் இறந்து கிடந்துள்ளார். இது பற்றிய தகவல் அவரது தம்பி கோவிந்தராஜனுக்கும், ராயப்பன்பட்டி காவல் நிலையத்திற்கும் கேப்டன் பிரபாகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ராயப்பன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, சார்பு ஆய்வாளர் சுகுமார் ஆகியோர் இறந்த கவிதாவின் சடலத்தை கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். தனது சகோதரி கவிதா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி கோவிந்தராஜ் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.