பெரியகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனை அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்கப்படுமா?
பெரியகுளம் பகுதியில் விற்பனை செய்யப்படும் போதை பாக்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் பகுதியில் விற்பனை செய்யப்படும் போதை பாக்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசால் கடந்த 5 வருடங்களுக்கு முன் போதை பாக்குகளை தடைசெய்தனர். இதனால் கடைகளில் விற்பனை செய்வது குறைந்தது. கர்நாடகத்தில் போதை பாக்குகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் கர்நாடகத்திற்கு சென்று அங்கிருந்து போதை பாக்குகளை வாங்கி வந்து பெரியகுளம் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபம் பார்த்து வருகின்றனர்.
இவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயரளவுக்கு சில பலசரக்கு கடைகளின் உரிமையாளர்களை கைது செய்து, வீட்டிற்கு அனுப்பிவிடுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களே போதை பாக்குகளை மீண்டும் விற்பனை செய்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் புதியதாகவும் பல்வேறு இடங்களில் போதை பாக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.
இதனால் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போதை பாக்குகளை வெளிமாநிலங்களில் இருந்து எடுத்து வருபவர்கள் மற்றும் வாகனத்தின் உரிமையாளர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.