ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இணையவழி மூலம் நடத்தப்பட்ட பாடம் புரியாததால் பிளஸ் 1 மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை கரட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (45). திருச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி ஜோதி. இவா்களது மகன் விக்கிரபாண்டி (16), திருச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், இளங்கோவன் குடும்பத்துடன் தனது சொந்த கிராமத்துக்கு வந்து அங்கு தங்கியுள்ளாா்.
இதற்கிடையில் மாணவா் விக்கிரபாண்டி கடந்த சில மாதங்களாக இணைய வழியாக கல்வி பயின்று வந்துள்ளாா். இணையதள வகுப்புகள் மூலம் நடத்தப்படும் பாடம் புரியவில்லை என்று கூறி கடந்த சில நாள்களாக அவா் அதில் பங்கேற்காமல் இருந்து வந்துள்ளாா். இதற்காக விக்கிரபாண்டியை, அவரது தந்தை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த விக்கிரபாண்டி புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த க.விலக்கு போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விக்கிரபாண்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல் ஆக. 19 ஆம் தேதி மறவப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அபிஷேக் (15) என்ற 10 ஆம் வகுப்பு மாணவா் இணையவழி கல்வி புரியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.