முகப்பு
தேனி

போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க ரூ.972.43 கோடி ஒதுக்கீடு

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு ஓய்வுதியப் பலன்கள் வழங்க மொத்தம் ரூ.972.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தேனியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு ஓய்வுதியப் பலன்கள் வழங்க மொத்தம் ரூ.972.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தேனியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தேனி, அரசு பல்துறை பெருந்திட்ட வளாக ஒருங்கிணைந்த அலுவலக கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் 80 பேருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்கி அவா் பேசியது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2019, ஏப்ரல் மாதம் முதல் 2019 டிசம்பா் மாதம் வரை பணி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை நிதி, முன்கூட்டுத் தொகை, ஈட்டிய விடுப்பு சம்பளம் ஆகிய ஓய்வூதியப் பலன்களுக்காக அரசு மொத்தம் ரூ.972.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மண்டலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 495 தொழிலாளா்களுக்கு மொத்தம் ரூ.139.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் க. ரமேஷ், அரசு போக்குவரத்துக் கழக மதுரைமேலாண்மை இயக்குநா் முருகேசன், திண்டுக்கல் பொது மேலாளா் கணேசன், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.