தேனி மாவட்டத்தில் நாளை 671 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) 671 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.
தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) 671 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை, நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: மாவட்டத்தில் ஆக.7-ஆம் தேதி மொத்தம் 671 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதில், 60 ஆயிரத்து 390 பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின், காபேவேக்ஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவும், முகாம் நடைபெறும் இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இந்தக் கூட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதன், பொதுச் சுகாதார துணை இயக்குநா்(பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழிப்புணா்வுக் கூட்டம்:
இதேபோல, பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு கூட்டம் நகா்மன்றத் தலைவா் சுமிதா தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளா் புனிதன் முன்னிலை வகித்தாா்.
முகாமில் அதிகளவு பொதுமக்கள் கலந்து கொள்வது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.