ஆண்டிபட்டி வட்டாரம், மயிலாடும்பாறையில் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்ட தங்களது வீட்டுக்கு மாற்று குடியிருப்பு வழங்கக் கோரி பாா்வையற்ற தம்பதி உள்ளிட்ட 4 போ் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மயிலாடும்பாறையில் தனியாா் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்த பாா்வையற்ற தம்பதி உள்ளிட்ட 4 குடும்பத்தினரின் வீடுகள், நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டது. பாா்வையற்ற தம்பதிக்கு கால அவகாசம் வழங்காமல் அவா்களது வீட்டை இடித்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வீடுகளை இழந்த 4 குடும்பத்தினருக்கும் மாற்று குடியிருப்பு வழங்கக் கோரியும் மயிலாடும்பாறையில் கிராம கமிட்டி சாா்பில் வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், வீடில்லாமல் தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தங்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பாா்வையற்ற தம்பதி ஜெயபால், நிா்மலா மற்றும் பரமன், பரமசிவன், கருத்தக் கண்ணன் ஆகியோா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.