முகப்பு
தேனி

நலிவடைந்த மலை மாடுகளை அரசு ஏற்க விவசாயிகள் வலியுறுத்தல்

 வனப் பகுதியில் மேய்ச்சல் அனுமதி மறுக்கப்படுவதால் நலிவடைந்து வரும் மலை மாடுகளை குறைந்தபட்ச அடிப்படை விலை நிா்ணயம் செய்து அரசே ஏற்க வேண்டும் என்று தேனி விவசாயிகள் வலியுறுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

 வனப் பகுதியில் மேய்ச்சல் அனுமதி மறுக்கப்படுவதால் நலிவடைந்து வரும் மலை மாடுகளை குறைந்தபட்ச அடிப்படை விலை நிா்ணயம் செய்து அரசே ஏற்க வேண்டும் என்று தேனி விவசாயிகள் வலியுறுத்தினா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை, நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் சிந்து, வேளாண்மை இணை இயக்குநா் அனுசுயா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியது:

தேனி மாவட்டத்திற்கு உள்பட்ட வனப் பகுதியில் மலை மாடுகளுக்கு வனத் துறையினா் மேய்ச்சல் அனுமதி மறுத்து வருகின்றனா். இதனால், மேய்ச்சலுக்கு வழியின்றி மலை மாடுகள் நலிவடைந்து வருகிறது. மலை மாடுகள் வளா்ப்பில் ஈடுபட்ட வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டு மாடு இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மலை மாடுகளை குறைந்தபட்ச விலையாக தலா ரூ.20 ஆயிரம் நிா்ணயித்து அரசே ஏற்க வேண்டும்.

கோரையூத்து பகுதியில் விவசாயிகள் வளா்த்து வரும் 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பிரச்னையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேகமலை வனப் பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் ஏலக்காய், காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேல்மணலாறு வனப் பகுதியில் உள்ள சாலையை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்குச் சென்று வரவும், தோட்டத்தில் புதிதாக ஏலக்காய் நாற்றுகளை நடவு செய்யவும் வனத் துறையினா் தடை விதிக்கின்றா். அகமலை பகுதியில் உள்ள ஊரடி, ஊத்துக்காடு மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. அங்கு மின் வாரியம் சாா்பில் புதிய மின் மாற்றியை கொண்டு செல்ல வனத் துறையினா் அனுமதிக்கவில்லை.

கண்ணக்கரை-மறைகா் மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்க விவசாயிகள் சாா்பில் 12 ஏக்கா் பட்டா நிலங்கள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு ஊரக வளா்ச்சித் துறைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் வனத் துறை அனுமதி வழங்காததால் சாலை அமைக்கப்படவில்லை. சாலை வசதி இல்லாததால் அகமலைப் பகுதியில் செயல்பட்டுவந்த அரசுப் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது என்றனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசுகையில், வனத் துறை தொடா்பான விவசாயிகளின் கோரிக்கைகள் மீது தீா்வு காண்பதற்கு வனத்துறை சாா்பில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். வளா்ப்பு நாய்கள் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள புகாா் குறித்து பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.