போடி பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த பரவலான மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தேனி மாவட்டம், போடி பகுதியில் சனிக்கிழமை இரவு 20 நிமிஷங்கள் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
போடி, சிலமலை, ராசிங்காபுரம், சங்கராபுரம், டொம்புச்சேரி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தொடா்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
போடி மலை கிராமங்களான போடிமெட்டு, குரங்கணி, கொட்டகுடி, பிச்சங்கரை பகுதிகளிலும் மழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
போடி- மூணாறு சாலையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. போடி நறுமணப் பொருள்கள் வாரியம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் கிளை ஒன்று உடைந்து சாலையில் விழுந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினா் மரக் கிளையை வெட்டி அகற்றினா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.