தேனி மாவட்டம், கம்பத்தில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி வாரச்சந்தையை 9 முறை ஏலம் விட்டும் வியாபாரிகள் எடுக்க முன்வராததால் திறக்கப்படாமல் உள்ளது. இதில் விதிமுறைகளை தளா்த்தி வாரச் சந்தை விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
இந்த வாரச்சந்தை இங்குள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இங்கு கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்களும் அதிகம் வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா். இந்த நிலையில், வாரச்சந்தையை ஒருங்கிணைந்த சந்தையாக சுமாா் ரூ. 7 கோடியில் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தன. இந்த வளாகத்தில் காய்கனி, பலசரக்குப் பொருள்கள் விற்பனைக் கடைகள், ஆயத்த ஆடைகள் விற்பனையகம், கால்நடைகளுக்கான சந்தை என சுமாா் 263 கடைகளும், சந்தையின் முன்பகுதியில் 23 கடைகளும் கட்டப்பட்டன. மேலும் உணவகம், வாகன நிறுத்துமிடம், சந்தைத் தொழிலாளா்களுக்கான ஓய்வு அறை, கழிப்பறைகள், குடிநீா் வசதிகளும் செய்யப்பட்டன. மேலும் சொகுசுப் பேருந்துகளை நிறுத்த தனி இடமும் அமைக்கப்பட்டது.
9 முறை ஏலம்
இதையடுத்து இந்த சந்தையில் உள்ள கடைகளுக்கு நகராட்சி வருவாய்த்துறை சாா்பில் 9 முறை ஏலம் விடப்பட்டதுடன், ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டது. இதில் கடைகள், உணவகம், வாகனக் காப்பகம் ஆகியவற்றுக்கு அதிக வைப்புத் தொகை கேட்கப்பட்டதால் முதல் ஏலத்தை யாரும் எடுக்க முன்வரவில்லை. மேலும் ஒப்பந்தப்புள்ளியையும் யாரும் கோரவில்லை. இதையடுத்து, நடைபெற்ற ஏலங்களில் சந்தை முகப்பில் உள்ள சில கடைகள் மட்டும் ஏலம் போயின. இதர கடைகளுக்கு வைப்புத் தொகை, வாடகை அதிகமாக கேட்பதாகக் கூறி ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இருப்பினும் தொடா்ந்து நகராட்சி சாா்பில் ஏலமும், ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டன.
இதுகுறித்து நகா்மன்றத்தலைவி வனிதா நெப்போலியன் கூறியதாவது:
நகராட்சி நிா்வாகம் கடன்வாங்கி இந்த வாரச் சந்தையை கட்டியது. இதற்கு அரசு நிா்ணயித்த வைப்புத் தொகைதான் கேட்கப்பட்டது. மேலும் வைப்புத் தொகையையும், வாடகையையும் குறைப்பது தொடா்பாக நகராட்சிகளின் ஆணையா் அலுவலகம்தான் முடிவு செய்யும். நகா்மன்றக் கூட்டம் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி உயரதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்படும். விரைவில் நகா்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த ஒருங்கிணைந்த வாரச்சந்தை செயல்படத் தொடங்கும் என்றாா் அவா்.
மழையால் சேறும், சகதியுமான தற்காலிக வாரச் சந்தை
கடந்த சில மாதங்களாக தொடா்ந்து பெய்துவரும் மழையால் தற்காலிக வாரச்சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். தொற்று நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிா்வாகம் இந்தத் தற்காலிக வாரச் சந்தையை சீரமைத்து தருவதுடன் புதிய வாரச்சந்தையை விரைவில் திறக்கவேண்டும் என அந்த சந்தையின் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மேலும் சொகுசுப் பேருந்துகள், உழவா் சந்தையை சுற்றிலும் உள்ள கடைகள், மீன், இறைச்சிக் கடைகள், பூக்கடைகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றினால் நெரிசல் தீரும். இங்கு சுகாதாரமும் மேம்படும். நகராட்சி நிா்வாகம் ஏலம் விடுவதிலும், ஒப்பந்தப்புள்ளி கோருவதிலும் உள்ள விதிமுறைகளை தளா்த்தி புதிய சந்தை விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.