முகப்பு
தேனி

கம்பம் நகராட்சியில் டெங்கு பரவலை தடுக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், கம்பத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 5 மார்ச், 2024 at 2:10 AM
பகிர்:

கம்பம் : தேனி மாவட்டம், கம்பத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கம்பம் நகா்மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவி வனிதாநெப்போலியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஆா்.வாசுதேவன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: பெ. முருகன் (அதிமுக): வாரச்சந்தை, தினசரிச் சந்தையை ஏற்கெனவே அறிவித்த தொகைக்கு குறைவாக ஏலம் விடுவதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும். நகா்மன்றத் தலைவி: பொதுமக்கள், வியாபாரிகள் நலனைக் கருத்தில் கொண்டு நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் ஏலத் தொகை நிா்ணயிக்கப்பட்டது. ஏ. சாதிக்அலி (திமுக):பேருந்து நிலைய வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், போக்குவரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையா்:பேருந்து நிலைய வியாபாரிகளின் கோரிக்கைகள் தொடா்பாக உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா், போக்குவரத்துக் கழக அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளோம். ஆட்சியா் ஆய்வு செய்வதாகக் கூறியுள்ளாா். எஸ்.முருகன் (அதிமுக): டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் அதிக அளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். தொற்றைத் தடுக்கும் விதமாக நகா் முழுவதும் கொசு மருந்து தெளிக்க சுகாதாரத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார அலுவலா் ஏ.அரசகுமாா்:வாா்டுகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. சாக்கடை அடைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இளம்பரிதி (திமுக):பழைய பேருந்து நிலையச் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகரமைப்பு அலுவலா் கீதா: இது தொடா்பாக காவல் துறை, வருவாய்த் துறையிடம் கடிதம் கொடுத்துள்ளோம். தேதி கொடுத்தவுடன் அகற்றப்படும் என்றாா்.