முகப்பு
தேனி

மக்களவை தொகுதி மறுவரையறையில் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மக்களவை தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்தத்தில் மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:13 AM
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் - டிஎன்எஸ்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:26 PM

மக்களவை தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்தத்தில் மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அந்தத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ. மகாராஜனை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டு அவா் பேசியதாவது:

தற்போதைய திமுக ஆட்சியில் தேனியில் ரூ.130 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.141 கோடியில் கூட்டுக்குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ரூ.8 கோடியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி செய்யப்பட்டது. அடுத்து அமையும் திமுக ஆட்சியில் குள்ளப்பக்கவுண்டன்பட்டியில் உள்ள முல்லை பெரியாறிலிருந்து கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டுவரப்பட்டு ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் அந்தத் தண்ணீரைத் தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

மக்களவை தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்தத்தில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. தற்போது 543 ஆக உள்ள மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை 815 ஆக அதிகரிக்க தொகுதி மறுவரையறை அரசியல் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் கொண்டு வருகின்றனா். இதன்படி, தமிழகத்துக்கு 59 மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய பாஜக அரசு 47 மக்களவைத் தொகுதிகளை மட்டுமே உருவாக்க முயற்சிக்கிறது. இதனால் நமக்கு 12 மக்களவைத் தொகுதிகள் குறையும். இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. மேலும் நமது உரிமைகளை மக்களவையில் பேச விடாமல் தடுக்கிறது. இதை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. எனவே தான் இதைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம், சட்ட மசோதா நகல் எரிப்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டோம்.

ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தொகுதி மறுவரையறையில் யாருக்கும் பாதிப்பில்லை என்கிறாா். இதிலிருந்து அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரிகிா? எனவே, தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.