தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கழுத்தை அறுத்து பெண்ணைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சக்தி மாரியம்மாள் (30). சிந்துவம்பட்டியைச் சோ்ந்தவா் சிலம்பரசன். இவா்கள் இருவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், சக்தி மாரியம்மாளுக்கும், பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராஜாவுக்கும் (30) இடையே பழக்கம் இருந்து வந்ததாம். சக்தி மாரியம்மள் திங்கள்கிழமை மாலை வீட்டில் இருந்தாராம்.
அப்போது, அங்கு வந்த ராஜா அவரிடம் தகராறு செய்து விட்டு வெளியே சென்றுவிட்டாராம். இதைத்தொடா்ந்து, அருகிலிருந்தவா்கள் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, சக்தி மாரியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தாராம்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.