கலசலிங்கம் பல்கலை. சார்பில் கொரிய மொழிப் பயிற்சி மையம்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை மற்றும் சென்னையில் கொரியன் மொழி பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
விருதுநகர்கலசலிங்கம் பல்கலை. சார்பில் கொரிய மொழிப் பயிற்சி மையம்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை மற்றும் சென்னையில் கொரியன் மொழி பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை மற்றும் சென்னையில் கொரியன் மொழி பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக கொரிய பல்கலைக்கழகத்துடன் கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கொரியா நாட்டில் உள்ள சூன்ங்சில் பல்கலைக்கழக உதவித் தலைவர் டாக்டர் இன்சுங்லீ, ஒருங்கிணைப்பாளர்-வெளிநாட்டு உறவு கிவான்ஸ் சூ ஜியான், இயக்குநர்-மொழிப்பயிற்சி டாக்டர் சின்க்கான் சான், நிர்வாகத் தலைவர் பயான்ங்சான் சன் ஆகியோர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தனர்.இவர்களை வேந்தர் க.ஸ்ரீதரன் வரவேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் சூன்ங்சில் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள ஒரே பல்கலைக்கழகம் கலசலிங்கம் பல்கலைக்கழகம் தான். ஒப்பந்தத்தை விரிவாக்கம் செய்து அனைவரும் பயன்படச் செய்ய வேண்டும் என்றார்.
துணை வேந்தர் கன்னியப்பன் பேசுகையில் கூறியதாவது: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, கொரிய மொழிப் பயிற்சியை, கொரியப் பேராசிரியரே இங்கு வந்து மாணவர்களுக்கு தருகிறார். இதனால் கொரியன் தொழிற்சாலைகளில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதுவரை கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் 254 பேர் கொரியன் மொழி கற்றுள்ளனர்.
தற்போது மதுரை மற்றும் சென்னையில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சூன்ங்சில் பல்கலைக்கழகம் இணைந்து கொரியன் மொழிப் பயிற்சி மையம் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரியா சூன்ங்சில் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச கருத்தரங்குகள் வெவ்வேறு துறை சார்பில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும். ஆராய்ச்சி கட்டுரைகள் பரிமாற்றம் செய்யப்படும். தொழில் நுட்பத் துறையிலும் தேவைக்கேற்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என்றார் அவர்.
பல்கலைக்கழகத்தின் டீன் (வெளியுறவுத் துறை)டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், இதுவரை 15 கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் சூன்ங்சில் பல்கலைக்கழகம் சென்று ஒரு செமஸ்டர் படிப்பையும், அங்கிருந்து 6 மாணவர்கள் இங்கு வந்து ஒரு செமஸ்டர் படிப்பையும் முடித்துள்ளனர். இதுபோன்று ஆண்டுதோறும் மாணவர்கள் கொரியா சென்று படிக்கலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை டீன்கள், துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கொரிய மொழிப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பழனிச்செல்வம், பயிற்சி ஆசிரியர் சோய் டாங்கில் ஆகியோர் செய்திருந்தனர். டீன் அகடமிக் சரவணசங்கர் நன்றி கூறினார்.