முகப்பு
விருதுநகர்

விருதுநகர்: 10-வகுப்பு தேர்வில் சிறப்பிடங்கள் பெற்றவர்களுக்கு அமைச்சர் வைகைச்செல்வன் பாராட்டு

விருதுநகர் மாவட்டத்தில், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளிக் கல்வி மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச்செல்வன் வெள்ளிக்கிழமை பாராட்டி நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:29 PM

விருதுநகர் மாவட்டத்தில், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளிக் கல்வி மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச்செல்வன் வெள்ளிக்கிழமை பாராட்டி நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் 10-வது பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையில் 9.15 மணிக்கு இணையதளத்தில் வெளியானது. விருதுநகர் மாவட்டத்தில் இத்தேர்வை மாணவர்கள்-14066, மாணவிகள்-13940 என மொத்தம் 28006 இத்தேர்வு எழுதினார்கள். இதில், மாணவர்கள்-13078, மாணவிகள்-13441 என மொத்தம் 26519 பேர்கள் வரையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இத்தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்று மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து மாணவ, மாணவிகளை பாராட்டி பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வைகைச்செல்வன் நினைவு பரிசுகளையும் வழங்கினார். அப்போது, உடன் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜூ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி, கோட்டாட்சியர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement

2 ஆண்டுகளாக முதலிடத்தை இழந்த விருதுநகர் மாவட்டம்: விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழிலுக்கு பின் விவசாயம் நடைபெற்று வருகிறது. வறட்சியான மாவட்டமாக திகழ்ந்து வருவதால் கிராமங்களில் அதன் தன்மையை உணர்ந்து மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை படிப்பின் மூலமே வெளிப்படுத்த முடியும். அதனால், கண்ணும் கருத்துமாக படித்தால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை பெற முடிகிற சூழ்நிலை இருக்கிறது. இதை உணர்ந்து மாணவ, மாணவிகளும் தொடர்ந்து படிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால், பிளஸ்2 தேர்வில் தொடர்ந்து 28 ஆண்டுகளாகவே மாநில அளவி்ல முதலிடத்தை பெற்று வருகிறது. அதேபோல், 10-வது வகுப்பு தேர்வில் 26 ஆண்டுகளாக முதலிடம் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் 2007-2008ல் 95.49 சதவீதமும், 2008-09ல் 95.76 சதவீதமும், 2009-10ல் 96.41 சதவீதமும், 2010-11ல் 95.93 சதவீதமும் பெற்று அதற்கு முன்பு வரையில் முதலிடத்தை பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு 93.53 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தையும், நிகழாண்டில் 94.69 சதவீதம் பெற்றும் முதலிடத்தை இழந்து வருகிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 10-வது பொதுத் தேர்வில் முதலிடங்களை இழந்து வருகிறது. நிகழாண்டில் 5-வது இடம் பெற்றுள்ளது. இனி வருங்காலங்களில் இம்மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பாடவாரியாக தேர்ச்சி விவரங்கள் கணக்கெடுக்கப்படுகிறது. இதன் மூலம் பின் தங்கிய பள்ளிகளின் விவரங்கள் தெரியவரும். அதன் அடிப்படையில் அப்பள்ளிகளை கண்டறிந்து மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.