விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் வலையங்குளத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வலையங்குளம் கண்மாய்க்கு மழைநீர் செல்லும் வரத்து கால்வாய்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் கண்மாய்க்கு செல்ல வேண்டிய மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்து இப்பகுதியில் பயிர்கள் அனைத்தும் நாசமானதால் விவசாயிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து விவசாய நிலத்தில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றுவதுடன் கண்மாய்க்கு செல்ல வேண்டிய வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி வலையங்குளத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறியதாவது: வலையாங்குளம் காட்டுப்பகுதியில் பெய்யும் மழைநீர் 4 வரத்து கால்வாய்கள் மூலம் வலையங்குளம் கண்மாய்க்கு சென்று கண்மாய் நிரம்புவது வழக்கம். இந்த கண்மாய் தண்ணீரால் இப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பரப்பளவு விவசாய நிலங்கள் பயனடைந்து வந்தன. கடந்த 20 ஆண்டு காலமாக வரத்துக் கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் கால்வாய்கள் அனைத்தும் மண்மூடி கால்வாய் இருந்த சுவடே தெரியவில்லை.
கால்வாய்கள் அனைத்தும் மண்மூடி உள்ளதால் கண்மாய்க்கு செல்ல வேண்டிய மழைநீர் விவசாய நிலங்களில் சூழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் சரியாக மழை பெய்யவில்லை. இந்த ஆண்டு கடந்த மாதமே இப்பகுதி விவசாயிகள் கம்பு, சோளம், கேப்பை, மக்காசோளம், பருத்தி, மல்லி போன்ற பயிர்களை பயிர் செய்தனர். கடந்த 1 வாரமாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் பயிர் செய்த விளை நிலங்களில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயிர்கள் அனைத்தும் அழுகி நாசமாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றுவதுடன் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மழைநீரால் பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.