மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை
காரியாபட்டியில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
காரியாபட்டியில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (65). இவர், தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அழகு மீனாள் (50). இவர், மின்வாரிய அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், 3 மாதங்களுக்கு முன் வேலைக்குச் சென்ற அழகு மீனாளை, பள்ளி முன்பாக ராமலிங்கம் வெட்டிக் கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார், ராமலிங்கத்தை கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ராமலிங்கம், காரியாபட்டி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
Advertisement
இதனிடையே, கடந்த 2 நாள்களாக கையெழுத்திட ராமலிங்கம் காவல்நிலையம் வரவில்லையாம். இந்நிலையில், காரியாபட்டி அருகேயுள்ள செவல்பட்டி மயானத்தில் உள்ள மரத்தில் ராமலிங்கம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து, காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.