விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள மறவர்பெருங்குடி பட்டத்தரசியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை இலந்தை முள் மேல் நடந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, கடந்த திங்கள்கிழமை முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை, அம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பட்டத்தரசியம்மன் கோயில் முன்பாக இரண்டடி உயரம், சுமார் பத்தடி நீளத்துக்கு இலந்தை முள் போடப்பட்டது.
விரதம் மேற்கொண்டு வந்த பாரம்பரிய பூசாரிகளான ராமலிங்கம், அய்யனார், பாக்கியலட்சுமி, பார்த்திபன் ஆகியோர் இலந்தை முள் மேல் நடந்து விழாவைத் தொடக்கி வைத்தனர். பின்னர், பக்தர்களும் வரிசையாக முள் மேல் நடந்து நள்ளிரவு வரை தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.