தலைமை ஆசிரியரை இடம் மாற்றக் கோரி கிராமத்தினர் மனு
விருதுநகர் அருகே தவசிலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணி புரியும் பெண் தலைமை ஆசிரியரை வேறு இடத்துக்கு மாற்றம்
விருதுநகர் அருகே தவசிலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணி புரியும் பெண் தலைமை ஆசிரியரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே தவசிலிங்காபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 52 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்குள்ள பெண் தலைமை ஆசிரியர் உடல் நிலை சரியில்லாததால் மாணவ, மாணவிகளுக்கு முறையாக பாடம் நடத்துவதில்லை. குழந்தைகளுக்கு வீட்டு பாடமும் வழங்குவதில்லை. இதனால், 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் படிக்க சிரமப்படுகின்றனர். மேலும், ஆறாம் வகுப்பில் ஆமத்தூரில் உள்ள அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால், உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கூட தெரிய வில்லை என தினமும் பெற்றோர்களை பள்ளிக்கு வரச் சொல்லுகின்றனர். கூலி தொழில் செய்யும் நாங்கள் அடிக்கடி பள்ளிக்கு செல்வதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது.
எனவே, தவசிலிங்காபுரத்தில் உள்ள பெண் தலைமை ஆசிரியரை இடமாறுதல் செய்து, முறையாக பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.