சுயசிந்தனை, விடா முயற்சி ஆகிய இரண்டையும் மாணவர்கள் மேற்கொண்டால், அவர்கள் நினைத்த இலக்கை எளிதில் அடைய முடியும் என, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.பி. செல்லத்துரை தெரிவித்தார்.
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.பி. செல்லத்துரை கலந்துகொண்டு, 626 இளநிலை, 280 முதுநிலை மற்றும் 120 ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: இன்றைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக 25 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே உயர் கல்வி படிக்கின்றனர். கிடைத்த வாய்ப்பை செம்மையாகப் பயன்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையில் பரிணமிக்க முடியும்.
உலக நாடுகள் இந்தியாவில் உள்ள மனிதவளத்தை சார்ந்திருக்கக் கூடிய அளவுக்கு கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். எனவே, இளைஞர்கள் வெறும் புத்தக அறிவை வளர்த்து கொள்வதை விட சுயசிந்தனை, விடாமுயற்சி ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி. சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் ஜே. சரவணன் பட்டமளிப்பு விழாவை தொடக்கி வைத்தார்.
இதில், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில், ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.